டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
புதிய கல்விக் கொள்கையையட்டி 1986ல் நவோதயா பள்ளி மத்திய அரசால் திட்டமிடப்பட்டது. மாநிலத்தில் தரமான கல்வி வலியுறுத்தி தேசியப் பார்வையுடன் மாணவர்களை தயாரிப்பதே நோக்கம். மத்திய அரசு குழு நிதி சுமையை ஏற்றது. மாணவர்கள், மாணவிகள் தங்கி படிக்கலாம். மனிதவள துறையின் கீழ் சுயாட்சி நிறுவனம் மேற்பார்வையிடும். தமிழ்நாடு நவோதயாவை நிராகரித்தது. 25 ஏக்கர் நிலம் மாநில அரசால் வழங்கப்படவில்லை. இந்தி மொழி கட்டாயப் பாடம். கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு ஒப்புதலளிக்கிறது. தமிழக மாணவர்களுக்கு தொல்காப்பியம், புறநானூறு, திருக்குறள் சங்க இலக்கியம் புரியாது. ஆங்கிலம் சரளமாகப் பேச எழுதத் தெரியாது. இந்தி மொழியை வெறுத்ததால் வடபுல தொடர்பும், ஆதிக்கமும் அற்றுப் போனது. இன்று வடநாட்டு தொழிலதிபர்கள், கூலியாளர்கள் தமிழ்நாட்டை குறிப்பாக சென்னை, உட்பட நகரங்களை, மாவட்ட தலைமையிடங்களை ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஐந்து, ஆறு அடுக்கு, 10 அடுக்கு கட்டிட உரிமையாளர்களின் பெயர்களைப் பார்த்தால் புரியும். 100 கோடி ரூபாய் தொழில் வருமானம் ஈட்டும் தமிழ்நாடு வணிக நிறுவன உரிமையாளர், பங்குதாரர் பெயர் பட்டியலை மாநில, தமிழ் விரும்பும் அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். செம்மொழி கூப்பாடு புதிய மார்வாடி எழுச்சியை உண்டாக்கிய ரகசியம் பச்சைத் தமிழர்களுக்குத் தெரியவரும். முஸ்லிம் முஹல்லாக்கள் கல்வியில் நலிவடைந்துள்ளன. மத்திய அரசு தாராள நிதியுதவியுடன் துவக்கும் மூன்று மொழிக் கொள்கை நவோதயா பள்ளிக்கூடங்கள் முஸ்லிம் பகுதியில் உருவாக வேண்டும். மாநில அரசு வறட்டுப் பிடிவாதம் பாராமல் உடன் அனுமதி வழங்க முன்வர வேண்டும். தரமான அகில இந்தியக் கல்வி சிறுபான்மையினருக்குக் கிடைக்கும். வாழ்வு பிரகாசமடையும். 1992ல் பிரதமர் நரசிம்மராவ் அறிவித்த உலகமயமாக்கல், வடநாடு தென்னாடு பிரிவினையை ஒழித்தது. தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ளன. பீகார், ஒரிசா போன்ற பின்தங்கிய மாநிலங்களின் உழைக்கும் வர்க்கம் தமிழகத் தொழில் வளர்ச்சியை பயன்படுத்தி வளருகிறது. திராவிடக் கட்சி நிர்வாகிகளின் பேரன், பேத்திகள் இந்தி மொழி கற்றுள்ளனர். தமிழர்களுக்கு குறிப்பாக கிராமப்புறத்தவர்களுக்கு இந்திமொழி கற்கும் உரிமை 45 ஆண்டுகளாக மறுக்கப்படுகிறது. மத்திய அரசு இந்தி மொழியை ஆதரிக்கிறது. வளர்கிறது. 1965ல் இருந்த மொழி வெறி இன்று தமிழகத்தில் இல்லை. அரசியல் கூட்டணி இந்தி மொழி வெறியை தணித்துள்ளது. இந்தி தலைவர்களின் அருள், நெருக்கம், ஆசியுடன் தமிழகத் தலைவர்கள் பெரும் பணம், மீடியா வலிமை, தொழில் வளம் கொழுத்துள்ளனர். நவோதயா இந்தி பள்ளிக்கூடத்தை தடுத்து நிறுத்த, கண்டிக்க, ஒதுக்க, புறக்கணிக்க தமிழகத் தலைவர்களுக்கு எவ்வித அருகதையுமில்லை. குறைந்தபட்சம் முஸ்லிம்கள் பயனடையுமாறு முஹல்லாவில் நவோதயாவை அனுமதிக்க வேண்டும்.