டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
தமிழகத் தலைநகர் சென்னை சர்வதேச நகரங்களில் ஒன்று. தொடர்ச்சியாக கட்டப்பட்டு வரும் 10 மாடிக் குடியிருப்புகள், சந்து பொந்துகள், வீதிகளிலும் வானத்தை தொடும் அலுவலகங்கள் சாட்சி. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், மாலை ஆறுமணிக்கு மக்கள் பங்கேற்கும் கருத்தரங்கு விவாத அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நாட்டு நடப்பில் அக்கரையுள்ளோர் கூடி அரசுக்கு யோசனை கூறும் வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். மயிலாப்பூர் பகுதி சிறந்த முன்னுதாரண நிலையை தொடர்ந்து வகிக்கிறது. சீனிவாச சாஸ்திரி அரங்கம், இந்திய வாலிபர் சங்கம், பாரதிய வித்யா பவன், ராகசுதா மண்டபம் உட்பட அரைடஜன் வளாகங்கள் தீவிர பங்காற்றியுள்ளன. நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளர் முக்கால் மணி நேரம் தமது கருத்துரையை வழங்குவார். பழுத்த அனுபவசாலிகள், நிபுணர்களை நேரில் சந்திக்க, உரையாட வாய்ப்பு. எவ்வித பந்தா, போலித்தனம், கிளாமர் இன்றி நெருக்கம் காணலாம். ஐயம் போக்கலாம். கேள்விக் கணை தொடுக்கலாம். கருத்து மோதல் நிகழ்த்தலாம். பகிர்வு மட்டுமே முதன்மை. திரிபுகளுக்கு இடமில்லை. முரண்களுக்கு வாய்ப்புண்டு. ஜனநாயக மரபுடன் எதிர்வாதங்களை கூச்சமின்றி, விகாரமில்லாமல் நேரடியாக, பட்டவர்த்தனமாக, ஒலிவு மறைவின்றி அவையோர் முன் ஒலி பெருக்கியில் பேசலாம். பெரிய செலவு எதுவுமில்லை.
புதிய அறிவு அலை தமிழகத்தை ஆட்கொள்ள தயாராகிறது. ஒரு மனிதரை நடுநாயகமாக அமரவைத்து போற்றி பாடுவது இனி எடுபடாது. இவரை விட்டால் தமிழுக்கு ஆளில்லை. தமிழ்நாட்டுக்கு விமோசனமில்லை, ஜால்ரா தர்பாருக்கு முற்றுப்புள்ளி. அவையோரை முட்டாள்களாக, அப்பாவிகளாக, எதுவும் அறியாதவர்களாக பாவித்து உளறல் இனி நடக்காது. உரை நிகழ்த்துவோர், ஆடியன்ஸ் இருவரும் விஷயதாரிகள். சமமான ஞானவான்கள். இணையான பொறுப்பாளர்கள். ஒருவருக்கே அனைத்து சால்வைகளும், மாலைகளும், மதிப்பும், மரியாதையும் இனி தேவைப்படாது. மண், மக்கள் நலனில் அனைவருக்கும் பொறுப்புண்டு. கருத்துண்டு. உழைப்புமுண்டு. பகுத்தறிவுப் பூர்வமாக கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு போற்றி வந்த ‘‘மேடைக் கலாச்சாரம்’’ சரிந்து வீழ்கிறது. சில நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும். மணிக் கணக்கில் அறுவை தேவையில்லை. புள்ளி விவரமின்றி பேசக்கூடாது. எல்லோரும் அவரவர் வாழ்வில், துறையில் பிசி; மூழ்கியுள்ளனர். புதிய கருத்துக்கள், விடுபட்ட கருத்துக்கள், உச்சக்கட்ட நடைமுறை யோசனைகள் மட்டும் செவியேற்கப்படும். யாருடைய நேரத்தையும் யாரும் வீணாக்கக்கூடாது. உலகமயமாக்கல் சூழலில் புதிய பாதைக்கு சென்னை மயிலாப்பூர் வழிகாட்டுகிறது. ஜனநாயக மறுப்பாளர்கள் மேடையை அலங்கரிக்க முடியாது. மீறி மேடையை ஆக்கிரமித்தால் பொதுமக்கள் எதிரில் அமரமாட்டார்கள். கூலி, பட்டாளம், கொத்தடிமை கொண்டு அவையை நிரப்பலாம். மதம், மொழி, மாநிலம், தேசம் வரை புதிய மேடை யுக்தி வளர்த்தெடுக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment